Showing posts with label காமராஜர். Show all posts
Showing posts with label காமராஜர். Show all posts

Thursday, December 26, 2013

உழைப்புக்கு ஏற்ற கூலி

காமராஜர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த நேரத்தில் கூட்டத்திலிருந்த சிலர் “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என ஓங்கிக் குரல் கொடுத்தார்கள். அவர்களை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார் காமராஜர். பின்னர் பேசும் போது நீங்களெல்லாம் குரல் எழுப்புவது போல எல்லோரும் கேட்க ஆரம்பித்தால் “நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத மக்கள் பட்டினியால் கிடக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்” என்றார். கூட்டம் அமைதியானது.

                      
எல்லோரும் காமராஜர் என்ன சொல்லப்போகிறார்? என ஆர்வத்த...ுடன் இருந்தனர். “உழுபவனுக்கு நிலம் சொந்தம்” என நாம் சொல்கிறோம். நெற்கதிரை அறுப்பதற்குச் செல்லும் தொழிலாளர்கள் “கதிர் அறுப்பவர்களுக்கே நெல் சொந்தம்” என்று சொல்லி நெற்கதிர்களை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டால் கஷ்டப்பட்டு உழைத்த தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும்?

பின்னர் நெல்லை அரிசியாக ஆக்குவதற்கு அரிசி ஆலைக்குக் கொண்டு போகிறோம். அங்கு நெல்லை அரைத்துக் கொடுத்தவர் “தனக்கே அரிசி சொந்தம்” என்று சொல்லி விட்டால் நெல் உரிமையாளர்கள் நிலை என்னவாகும்?

வெறும் கையோடுதானே திரும்ப வேண்டிய நிலைவரும். இப்படியே போய்க் கடைசியில் சோறு சொந்தம் என்று சொல்லிவிட்டால் எல்லோர் நிலையும் என்ன ஆகும்? பட்டினிதானே? இந்த நிலை நாட்டில் ஏற்படக்கூடாது.

“உழைக்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு கூலி கேட்க வேண்டும் என்பததான் நல்லது” என எளிமையாக விளக்கம் தந்தார் காமராஜர்.
“உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்பதே சிறந்தது” என்கிற காமராஜரின் கருத்து உண்மைதானே?

Saturday, November 16, 2013

தலைவர்கள் மட்டுமில்லை, மக்களும்....


அது ஒரு கனாக் காலம் ... தலைவர்கள் .மட்டுமில்லை .. 


                                  

மக்களும் நேர்மையின் சிகரங்களாக வாழ்ந்தக் காலம் அது .... காமராஜர் ஒரு நாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் . 

அப்பொழுது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே .வந்தனர் பரட்டை தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் ஏழ்மையை பறைசாற்றின . பணியாளர் ஒருவர் அவர்களை விரட்ட , முற்பட , கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள் . தம்மை பார்க்க வரும் பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய காமராஜர் , அந்தக் குழந்தைகளை கவனித்து விடுகிறார் . அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க " என்ன யாரை பார்க்க வந்தீங்க ?"" என்று கேட்டப் படி அவரே குழந்தைகளிடம் வந்து விட ... 

அப்பொழுது அந்தச் சிறுமி தயங்கி பேசினாள் " உங்களைத் தான் பார்க்க வந்தோம் . எங்களுக்கு அப்பா இல்லை . அம்மா மட்டும் தான் . அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரீட்சை பீஸ் கட்ட பணம் இல்லை . உங்களை பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அது தான் வந்தோம்" என்றாள் ... 

அவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தப் படி , " அம்மா தான் அனுப்பிச்சாங்ளா ? என்று காமராஜர் கேட்க ... அந்த குழந்தைகளோ " இல்லை அய்யா , நாங்களாகத் தான் வந்தோம் . அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக விக்கறாங்க அதுல தான் எங்களை படிக்க வைக்கிறாங்க """ என்று சொல்ல . அதற்கு மேல் கேட்க முடியாமல் . மாடிக்கு சென்ற அவர் ஒரு கவருடன் .வந்தார் சிறுமியிடம் கொடுத்து " இதில் கொஞ்சம் பணம் இருக்கு . அண்ணனுக்கு பீஸ் . கட்டிடுங்க அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும் என்று சொல்லி அனுப்பி வைத்தார் ...." 

மறுநாள் மீண்டும் அந்தக் குழந்தைகள் வந்தனர் . உதவியாளர் வைரவன் குழந்தைகளை உள்ளே அழைத்து வந்தார் .... " வாங்க வாங்க " என்று அவர்களை வாஞ்சையுடன் அழைத்த காமராஜரிடம் அந்தக் குழந்தைகள் . " பரீட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா . அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க என்று காமராஜரிடம் அந்தச் சிறுமி ரசீதை நீட்டினாள் .... காமராஜர் கண் கலங்கி விட்டார் . 

ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா ? குழந்தைகள் அவரை ...வணங்கினார்கள் அவரும் குழந்தைகளை வணங்கினார் .... 

வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்

( நன்றி மாலை மலர் சிறப்பு இணைப்பிற்கு ) .

Saturday, September 21, 2013

தீரர் சத்தியமூர்த்தியும் - பெருந்தலைவர் காமராஜரும்

அரசியலில் குரு-சிஷ்ய நட்புக்கு உதாரணமாக யாரைச் சொல்லலாம்?

தீரர் சத்தியமூர்த்தியையும் பெருந்தலைவர் காமராஜரையும் சொல்லலாம்.
                      
சத்தியமூர்த்தியை வைத்து விருதுநகரில் கூட்டம் போட்டவர் காமராஜர். அன்றைய காங்கிரஸில் ராஜாஜியா, சத்தியமூர்த்தியா என்ற போட்டிதான் இருந்தது. அதில் சத்தியமூர்த்தி பின்னால் காமராஜர் நின்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சத்தியமூர்த்தி ஆனபோது, சிஷ்யன் காமராஜர் செயலாளராக ஆனார். தனக்குத் தெரிந்த எல்லா டெல்லித் தலைவர்களையும் காமராஜருக்கு அறிமுகம்செய்து வைத்தார் சத்தியமூர்த்தி. சில ஆண்டுகள் கழித்து நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காமராஜரை நிறுத்தினார் சத்தியமூர்த்தி. அப்போது செயலாளர் பதவியை சத்தியமூர்த்தி வகித்தார். அவருக்கு கீழே செயலாளராக இருப்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். சிஷ்யனின் தலைமையை குரு ஏற்றுக் கொண்ட காலம் அது. 1943-ல் சத்தியமூர்த்தி இறந்துபோனார். 11 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன காமராஜர், பதவி ஏற்பதற்கு முன்னதாக நேராக சத்தியமூர்த்தியின் வீட்டுக்குப் போய் அவரது மனைவி பாலசுந்தரத்து அம்மாளிடம் ஆசீர்வாதம் வாங்கினார். காங்கிரஸ் கட்சித் தலைமையகத்துக்கு சத்தியமூர்த்தி பவன் என்று பெயரும் சூட்டினார்.

தன்னுடைய சிஷ்யன் வளர்வதைப் பார்த்து பெருமைப்பட்டார் குரு. தன்னுடைய குருநாதர் புகழை கடைசி வரை பரப்பினார் சிஷ்யர். இந்தக் காலத்தில் இது சாத்தியமா?

ஜூனியர் விகடன்

காமராஜர் 111


1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச் சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபகசக்தி மிகுந்திருந்தது. 

2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார். 

3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.
4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார்.. 

5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில் காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்து போய் இருக்கிறார்கள். 

6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான், திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி கட்டி போல கரைந்து மறைந்து விடும். 

7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக சொல்லி ஆச்சரியப்படுத்துவார். 

8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப் பெரிய தொகையாகும். 

9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். 

10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி. எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக் கொள்வார். 

11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார். 

12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால் பெரிய கேக் கொண்டு வந்து வெட்ட சொன்னால், " என்னய்யா... இது?'' என்பார். கொஞ்சம் வெட்கத்துடன்தான் "கேக்'' வெட்டுவார். 

13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காமராஜர், "மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறைய தொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான் இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. 

14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும் "காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார். 

15. காமராஜருக்கு "பச்சைத்தமிழன்'' என்ற பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார். 

16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும் அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டு விட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக் கொள்வார். 

17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர் ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார். 

18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார். 

19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது. அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234 பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார். 

20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், "மக்கள் தலைவர்'' என்றே கூறினார். 

21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில் 8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தே காமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளை வைத்திருந்ததாக சொல்வார்கள். 

22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார். இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது. 

23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன் முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார். 

24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர் சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றி இருக்கிறார். 

25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். 

26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. "மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு. 

27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மா காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின் இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது குறிப்பிடத்தக்கது. 

28. காமராஜர் எப்போதும் "முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும், 4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார். 

29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக் கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்து போட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம் பேனா வாங்கி கையெழுத்திடுவார். 

30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதிய உணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையே பயன்படுத்தினார். 

31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே போட்டுக் கொள்வார். 

32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது. `எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு. 

33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார். 

34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள், இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக் ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார். 

35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து விட மாட்டார். நிதானமாக யோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்த செயலை எக்காரணம் கொண்டும் செய்து முடிக்காமல் விட மாட்டார். 

36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண கிராமத்தான் போலவே பேசுவார். 

37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனார். 

38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது. 

39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி' என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால் `கறுப்பு காந்தி' என்று அர்த்தம். 

40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராஜரையே சேரும். 

41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார். 

42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டார். 

43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார். 

44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும், ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுத்தன. 

45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச் சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். 

46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும் காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள் முழுவதும் இருந்தார்கள். 

47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழை மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக 1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர். 

48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால் ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள `ஓட்டல் எவரெஸ்ட்'டில் தான் தங்குவது வழக்கம். ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை. 

49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக் கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும் தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார். 

50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோ வரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகா வென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்ற பாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார். 

51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தினார். 

52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது. 

53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது. 

54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித் தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான். 

55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை கொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப் போவதுமில்லை. 

56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒரு பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான் சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில் ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால் விரும்பி சாப்பிடுவார் 

57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும் எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்' என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும். 

58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு டிரங்குப் பெட்டிதான். 

59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ். சீட் கேட்டு சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர் `மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' என அனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார். 

60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின் உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில் காமராஜரும் கலந்து கொண்டார். 

61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படி பேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார். 

62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல் நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராக இருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது. 

63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக் காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகிய மூவரும்தான். 

64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால் 1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது. 

65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதை செயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். 

66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப் பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான் ஏற்படுத்தப்பட்டது. 

67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும் பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. 

68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொரு பெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள் திறந்து வைத்து சாதனை படைத்தார். 

69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில், செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும் தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும். 

70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமே இரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும், தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது. 

71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது. விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது. 

72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ் மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சி காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. 

73. பெருந்தலைவர் காமராஜருக்கு "பாரத ரத்னா" எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது. 

74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்ட போது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கிய செயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3). நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது. 

75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காக எதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும் நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப் பேசுவார். 

76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம் செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர் பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி, முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான். 

77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறிய போதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர் காமராஜர். 

78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர் ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்கு இலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்து அனைவரையும் வியக்க வைத்தார். 

79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள் கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.

80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில் காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார். 
81. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம்ஆண்டு நினைவு நாளன்று15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால் தலையைவெளியிட்டது. 

82. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காமராஜரின் திருவுருவப்படம்அப்போதைய குடியரசுதலைவர் என். சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது. 

83. டெல்லியில் காமராஜரின்திரு உருவச் சிலைஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்ற மெரினாகடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்று தமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 

84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்' என்றுபெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் காமராஜர் நினைவாலயம்,அமைக்கப்பட்டுள்ளது. 

85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை அவரதுநினைவுச் சின்னமாக தமிழக அரசு மாற்றியது. 

86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர் மற்றவர்களுடையபணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான். 

87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், `கொஞ்சம்நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்! 

88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து! 

89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்! 

90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன்அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். `நான்உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க' என்றுகமென்ட் அடித்தார்! 

91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்துலால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்! 

92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமான அரசியல் நோக்கு,தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவை செய்கிற ஆசை இருந்தது. 

93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒரு போதும்அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்து விடுவார். 

94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களை சட்டவிஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்கமுற்படுவதையோ அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. 

95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாக எடுத்துக்கொள்கிற மனப்பக்குவம் கொண்டவர் காமராஜர். 

96.அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம் முடிந்து விட்டது என்றுஅர்த்தம். தன்னால் முடியாவிட்டால் `முடியாது போ' என்று முகத்துக்குநேராகவே சொல்லி அனுப்பி விடுவார். 

97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு எப்போதும்மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப் பார்ப்பதில்லை. அவர்கள்சொல்வதைக் கவனமுடன் கேட்டு ஆவண செய்வார். 

98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்க முடியும். யார்வேண்டுமானாலும் அவரிடம் நேரில் சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.

99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவே பிடிக்காது அவருக்கு. 

100. சொற்களை வீணாகச் செலவழிக்க மாட்டார். ரொம்பச்சுருக்கமாகத்தான் எதையும் சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவேஅனாவசிய செலவையும் அவர் அனுமதிப்பதில்லை. 

101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார். ஆனால்'எல்லாம் எனக்கு தெரியும்' என்கிற மனோபவம் ஒரு போதும் அவரிடம்இருந்ததில்லை. 

102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊரில் என்ன தொழில்நடக்கிறது. எந்த ஊரில் யார் முக்கியமானவர் என்பதெல்லாம் அவருக்குத்தெரியும். 

103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார். தேவைப்பட்டால்அவற்றில் திருத்தங்கள் செய்யத் தயங்குவதில்லை. 

104. சொல்லும் செயலும் ஒன்றாக இல்லாவிட்டால் அவருக்குக் கோபம்வந்து விடும். உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார். 

105. ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர் முழுமையாகப்பெற்றிருந்தார். அதனால்தான்அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச்சிறப்பாக வழிநடத்த முடிந்தது. 

106. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகி விடும்.முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள் அதிகாலை ஐந்துமணிவரையும் நீடிப்பதுண்டு. எத்தனை மணிக்குப்படுத்தாலும் காலைஏழுமணிக்கு விழித்துக் கொண்டு விடுவார் அவர். 

107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொரு திட்டமும் ஒரு மகத்தானகுறிக் கோளாகவே இருந்தது. 

108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால் ஒருமுறைகூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள் எழவிலை. கறைபடாதகரங்களுக்குச் சொந்தக்காரர் அவர். 

109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம். தம்முடையகருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில் இன்றளவும் நிலைத்துநிற்கிறார் காமராஜர்.

110. காமராஜர் எந்த வேலையை யும் தள்ளிப் போட்டதில்லை. அன்றையவேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கான வேலைத்திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டு விடுவார். 

111. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டு. ஏதாவதுஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச் செல்வார்.

Wednesday, September 11, 2013

ஒரு காலத்தில , காமராஜர் காமராஜர்னு ....


         ஒரு காலத்தில , காமராஜர் காமராஜர்னு ஒரு அரசியல்வாதி இருந்தாராம்....!மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினாராம்..

                                     

'ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!' என்று அவரது அறிவாற்றலை மெச்சினாராம் முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன்!

தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டாராம் இந்த காமராஜர்....!

விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்களெல்லாம் அழுதார்களாம்.."'இதுதான்யா ஜனநாயகம்....ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னாராம் ..!ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம் - இவ்வளவுதானாம் ....! ஒரு அரசியல்வாதி இருந்தாராம்....!

எளிமையின் சிகரம் - காமராஜ்

    அரசியல் தலைவர்கள் பொதுமக்களின் பிரதிநிதிகளாகவும், அவர்களின் மறுபதிப்பாகவும் வாழ வேண்டும். அரசியல்வாதிகளின் எளிமையான தோற்றம் அவர்களை மக்களோடு சமப்படுத்தும். பகட்டும் படோபாவமும், ஆடம்பரமும் அகங்காரமும் மன்னர்களிடம் இருந்து அதனாலேயே அழிந்தார்கள். இன்று மக்களை வழி நடத்தும் அரசியல்வாதிகளும் அதே தவற்றைச் செய்யலாமா? இந்த மனோபாவத்தை மாற்றும் மனிதனாக எளிமையாய் வாழ்ந்து அரசியலில் எளிமையின் சிகரமாய் பரிணமித்தவர்தான் பாரதப் பெருந்தலைவர்.

 

இந்தியாவில் வேட்டி சட்டைப்போடும் எத்தனையோ அரசியல் தலைவர்கள் வெளிநாடு போகும்போது மட்டும் கோட்டு சூட்டு போட்டு கோலம் செய்கிறார்கள். இது மண்ணின் மகத்துவத்தை மட்டும் மறைப்பதில்லை. நம்மையும் அது அந்நியப்படுத்திவிடுகின்றது.

1953 ல் பெருந்தலைவருக்கு மலாய் நாடு செல்லும் மாபெரும் வாய்ப்பு வந்தது. அந்த நாளில் மலாய் பிரிட்டிஷ் ஆதிக்க நாடாக இருந்தது.எனவே மலாய் நாட்டின் கமிஷனராக் இருந்தவர் இங்கிலாந்தைச் சார்ந்த ஜெனரல் டெம்ப்ளர் ஆவார்.தலைவர் காமராஜர் அவர்கள் மலாய் செல்வதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தது திரு. வேங்கடராஜுலு நாயுடு ஆவார். அவர்தான் நமது தலைவர் எப்படியாவது ஜெனரல் டெம்ப்ளருடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்பினார்.

டெம்ப்ளர் எப்பொழுதுமே ஆடம்பரத்தை பெரிதும் விரும்புவர். தனக்கு இணையானவர்களை மட்டுமே சந்திக்க விரும்புபவர். இங்கு இணையானவர் என்பது ஆடை அலங்காரத்தில் மட்டுந்தான். இதை உணர்ந்த வேங்கடராஜுலு நாயுடு அவர்கள் காமராஜ் அவர்களுக்கு மலாயாவில் இருந்து ஒரு கடிதம் எழுதினார்.கடித்த்தின் கருத்து இதுதான். ‘ஜெனரல் டெம்ப்ளர் கண்டிப்பானவர், ஆடைப்பாதி, அலங்காரம் மீதி என்னும் குணம் உடையவர். எனவே தாங்கள் அவரைச் சந்திக்க வேண்டியிருப்பதால் தயவு செய்து ஒரு கோட் தைத்துக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்வதாக’ எழுதியிருந்தார்.

வேங்கடராஜுலுக்கு பயம்.’தலைவர் வந்தும் ஜெனரல் டெம்ப்லரைச் சந்திக்க செல்ல வேண்டும். காமராஜ் தனது வழக்கப்படி கைத்தறி ஆடைகளோடு வந்துவிடக்கூடாது’ -என்று மனம் வருந்தினார்.டெம்ப்ளர் சாதாரண உடைகளை உடுத்தி இருப்பவர்களை மிகச் சாதாரணமாகவே மதித்து வெளியில் அனுப்பிவிடுவார். எனவே வேங்கடராஜுலு மனம் வருந்தியதில் உண்மை இருக்கிறது.

காமராஜ் வரும் விமானத்தை எதிர்பார்த்து கோலாலம்பூர் குதூகலித்தது. இந்தியத் தலைமகனைக் காண எங்கெங்கு பார்த்தாலும் தலைகள்!வேங்கடராஜுலு சந்தேகப்பட்டது போலவே நடந்துவிட்டது.

விமானத்தை விட்டு காமராஜ் எப்போதும் போலவே வேட்டி சட்டையுடன் வெளிவந்ததைக் கண்டு கலங்கினார் அமைப்பாளர். எப்போதும் போல் சாதாரணமாக கதர் வேஷ்டி, சட்டை, துண்டுடன் தலைவர் தன் தாயகத்தை உடையில் சுமந்துபோய் உள்ளத்தைக் காட்டிக்கொண்டிருந்தார். அழைத்த வேங்கடராஜுலு அகம் நொந்தார். இனி தலைவர்பாடு கமிசனர்பாடு என்று நினைத்தவாறே தலைவர் கமிஷனரிடம் அழைத்துப்போனார். எப்படியோ தலைவரை எதிர்ப்பார்த்த ஜெனரல் எளிமையாகப் பார்த்ததும் அசந்துபோனார்.

காமராஜரை வெறுக்கவில்லை. மாறாக தலைவரிடம் தனியே இருந்து பல மணி நேரம் பேசினார் ஜெனரல் டெம்ப்ளர் அவர்கள். பேசி முடித்து தலைவரை வழியனுப்ப வந்தவர்களிடம் ஜெனரல் அவர்கள் காமராஜர் அவர்களின் எளிமை மிகவும் பிடித்துப்போனது’ என்று கூறி எளிமையை சிகரத்தில் ஏற்றினார். இன்றோ ஒருநாள் கூத்துக்காக ஒன்பது ஜோடி கோட் சூட் தைத்து ஒரு முறை மட்டுமே மகிழ்கிறார்கள் அரசியல்வாதிகள்.

அதன் பின் ஒரு முறை ரஷ்யா செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தபோதும், தனக்காகத் தைத்தகோட் சூட்டையே வேண்டாம் என உதறிவிட்டு அதே எளிய உடையுடனே சென்று வந்தார். ரஷ்யா குளிர் அதிகம் உடைய நாடு. இருந்தும் தோளில் ஒரு துண்டைப் போட்டுவிட்டு எப்போதும்போல் எதார்த்தமாக ஒரு வேஷ்டி சட்டையை அணிந்து வெற்றியோடு திரும்பி வந்தார் தலைவர்.

இந்தப் பயணத்துக்காக தைத்து தலைவர் அணியாத ஆடைதான் அவரது நினைவகத்தில் நினைவுக்காக வைக்கப்பட்டுள்ளது. எங்கும் இவர் அணிந்த ஆடை என்று காட்சிக்கு வைப்பதைதான் பார்த்திருக்கின்றோம். ஆனால் – இது ரஷ்யா செல்ல தொண்டர்களால் தைத்துக் கொடுக்கப்பட்ட ஆடை , இதை தலைவர் அணிய மறுத்துவிட்டார்.’ என்ற செய்தியுடன் அவ்வாடை காட்சியில் வைக்கப்பட்டுள்ளது உலகிலேயே நமது அரசியல் தலைவனின் நினைவிடத்தில் மட்டுந்தான்.

இவ்விதம் எளிமையின் திருவுருவமாய்த் தோன்றி எளிமையின் சிகரமாக வாழ்ந்து இன்றைய அரசியல்வாதிகளுக்கு விளக்காக வாழ்ந்த பெருந்தலைவரின் இவ்வரிய வாழ்க்கை எல்லோரும் படிக்க வேண்டிய பாடமாகும்

Saturday, August 24, 2013

"காமராஜர் ஒரு சகாப்தம்"


           
கர்மவீரர் காமராஜர் தனக்கு‍ பிறந்தநாள் வாழ்த்து‍ சொன்ன திரு.ரத்தினவேலு‍என்பவருக்கு‍ அனுப்பிய பதில் கடிதம்.

                           

                         King Maker & man who brings Kings infront us by his acting - Kamaraj & Sivaji 

                               

 \






 

Like ME

Sample Text

Sample Text