Thursday, December 26, 2013

உழைப்புக்கு ஏற்ற கூலி

காமராஜர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த நேரத்தில் கூட்டத்திலிருந்த சிலர் “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என ஓங்கிக் குரல் கொடுத்தார்கள். அவர்களை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார் காமராஜர். பின்னர் பேசும் போது நீங்களெல்லாம் குரல் எழுப்புவது போல எல்லோரும் கேட்க ஆரம்பித்தால் “நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத மக்கள் பட்டினியால் கிடக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்” என்றார். கூட்டம் அமைதியானது.

                      
எல்லோரும் காமராஜர் என்ன சொல்லப்போகிறார்? என ஆர்வத்த...ுடன் இருந்தனர். “உழுபவனுக்கு நிலம் சொந்தம்” என நாம் சொல்கிறோம். நெற்கதிரை அறுப்பதற்குச் செல்லும் தொழிலாளர்கள் “கதிர் அறுப்பவர்களுக்கே நெல் சொந்தம்” என்று சொல்லி நெற்கதிர்களை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டால் கஷ்டப்பட்டு உழைத்த தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும்?

பின்னர் நெல்லை அரிசியாக ஆக்குவதற்கு அரிசி ஆலைக்குக் கொண்டு போகிறோம். அங்கு நெல்லை அரைத்துக் கொடுத்தவர் “தனக்கே அரிசி சொந்தம்” என்று சொல்லி விட்டால் நெல் உரிமையாளர்கள் நிலை என்னவாகும்?

வெறும் கையோடுதானே திரும்ப வேண்டிய நிலைவரும். இப்படியே போய்க் கடைசியில் சோறு சொந்தம் என்று சொல்லிவிட்டால் எல்லோர் நிலையும் என்ன ஆகும்? பட்டினிதானே? இந்த நிலை நாட்டில் ஏற்படக்கூடாது.

“உழைக்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு கூலி கேட்க வேண்டும் என்பததான் நல்லது” என எளிமையாக விளக்கம் தந்தார் காமராஜர்.
“உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்பதே சிறந்தது” என்கிற காமராஜரின் கருத்து உண்மைதானே?

Monday, December 9, 2013

அம்மான் பச்சரிசி...

                                 



காலுக்கடியில் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்ட மூலிகைகளை அறியாமலே தேவையற்ற களையாக நினைத்து அழித்துவிட்டு உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் நோய்களின் கூடாரமாக தங்கள் உடம்பை ஆக்கிக்கொண்டு, தினமும் மாத்திரை விழுங்கினால்தான் வாழ்வு என்று வாழ்கின்றனர்.

இந்த நிலைக்குக் காரணம் நம் முன்னோர்களின் அறிவுப் பொக்கிஷங்களை அலட்சியப்படுத்தியதன் விளைவேயாகும்..

முக்காலத்தையும் அறிந்தவர்களான சித்தர்களும் ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம்தான் சித்த மருத்துவம். இந்த மருத்துவம் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய மருத்துவத்தன்மை வாய்ந்த மூலிகைகளைப் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அம்மான் பச்சரிசி என்ற மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு... வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும்.

இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

Tamil - Amman Pacharisi

English - Snake weed

Sanskrit - Dugdhika

Telugu - Reddine narolu

Malayalam - Nela paalai

Botanical name - Euphorbia hirta

காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் - பேர்ந்தென்றாய்
ஓருமம்மான் பச்சரிசிக் குண்ம இனத்துடனே
கூருமம்மா ணொத்தகண்ணாய் கூறு

- அகத்தியர் குணபாடம்

அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்-றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படும்.

மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும்.

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க

அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

தாய்ப்பால் சுரக்க

சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். இதனால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உண்டான சத்துக்கள் யாவும் கிடைக்காமல் போய்விடும். தாய்ப்பால் சரியாக சுரக்காததால் சிலர் குழந்தைகளுக்கு புட்டிப்பால் அதாவது பசும்பாலோ கடையில் வாங்கிய பாலோ கொடுப்பார்கள். இதில் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது.

இவர்கள் தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.

மலச்சிக்கலைப் போக்க

இதன் இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும்.

வீக்கம் கொப்புளங்கள் ஆற

உடலில் கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது பற்று போட்டால் கொப்புளங்கள் வீக்கங்கள் குணமாகும்.

பெண்களுக்கு

வெள்ளைப் படுதலால் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு அளாவார்கள். அதிகமா-க கோபப்படுவார்கள். எப்போதும் டென்சனாகவே காணப்படுவார்கள். இந்த வெள்ளை படுதல் நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும் .

மரு நீங்க

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.

தாது பலப்பட

அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்

Tuesday, December 3, 2013

எங்கள் தேசம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? - சுப. உதயகுமாரன்


குற்றச்சாட்டு [1]: தேசத் துரோகி!

இந்திய, தமிழக ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம் என்னையும், அணுசக்திக்கு எதிராகப் போராடிவரும் எனது தோழர்களையும் பலவாறாகப் பழித்து வருகிறது. எங்கள் மீது சுமத்தப்படும் முக்கியமான குற்றச்சாட்டு நாங்கள் தேசத் துரோகிகள்.

 
இதில் முக்கியமான கேள்வி: இங்கே தேசம் என்று குறிப்பிடப்படுவது எது? சாதி-மத வெறி பிடித்த, ஊழல் மிகுந்த, பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்லக்குத் தூக்கும், முதலாளித்துவ, மக்கள் விரோத, இயற்கையைக் கொல்லும், இயன்றதையெல்லாம் விற்றுப் பிழைக்கும் ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம்தான் தேசம் என்றால், ஆம், நான் தேசத் துரோகிதான். தேசத் துரோகியாக வாழ்வதற்குப் பெருமைப்படுகிறேன். சாவது வரை தேசத் துரோகியாகவே வாழ விரும்புகிறேன், வாழ்வேன்.

“கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவையென அறிவுமிலார்” என்று பாரதி கவலைப்படுகிற பாமர, சக்தியற்ற, சாமான்ய, சாதாரண மக்கள்தான் தேசம் என்றால், அவர்களுக்கெதிரான அமைப்பை தூக்கி எறியும் தேசத் துரோகியாக வாழ விரும்புகிறேன்.

எனது 21-வது வயதிலேயே இந்தியா எனும் தேசத்தின் பிரதிநிதியாக, தூதுவராக பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அடுத்த இருபது வருடங்களில் சுமார் 30 நாடுகளில் பல்வேறு பள்ளிக்கூடங்களில், பல்கலைக்கழகங்களில், அலுவலகங்களில், ஆன்றோர் கூடும் சபைகளில், ஐ.நா. மன்றத்தில், சான்றோர் சந்திக்கும் மாநாடுகளில், மக்கள் மன்றங்களில் இந்த தேசத்தின் பெயரை, பெருமையை, பெரும்புகழை உயர்த்திப் பிடித்திருக்கிறேன். என்னால் என் தேசம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த விதத்திலும் சிறுமையடைந்துவிடக் கூடாது, சிரிப்புக்கிடமாகிவிடக் கூடாது என்று கவனமாக, கடமை தவறாது, கண்ணியத்தோடு, கட்டுப்பாட்டோடு வாழ்ந்திருக்கிறேன்.

இன்று நம் மக்கள் தங்கள் வாழ்வை, வாழ்வாதாரங்களை, வருங்காலத்தை, வரவிருக்கும் சந்ததிகளை இழந்துவிடக் கூடாது என்று என் தோழர்களோடு எழுந்து நிற்கிறேன். எங்களுக்குத் தரப்படும் பட்டம்: தேசத் துரோகி! ஒரே ஒரு கேள்வி: எங்கள் தேசம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?


சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
டிசம்பர் 2, 2013

எனக்கும் “அமெரிக்கா”வுக்கும் உள்ள தொடர்பு - சுப. உதயகுமாரன்




                     
கடந்த 1989 முதல் 2001 வரை சுமார் 12 ஆண்டுகள் நான் கல்லூரி மாணவனாக, பல்கலைக்கழக விரிவுரையாளராக, ஆய்வாளராக, வருகைதரு பேராசிரியராக அமெரிக்காவிலே வாழ்ந்தேன், பணியாற்றினேன். இந்தியாவுக்குத் திரும்பிய பிறகும், ஆண்டுதோறும் கோடை காலத்தில் அங்கே சென்று வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினேன், இடிந்தகரைக்கு வரும் வரை.

நோட்ரே டேம் (Notre Dame) பல்கலைக்கழகத்தில் சர்வதேச சமாதானம் பற்றிய முதுகலை பட்டப்படிப்பு படிக்கும்போது, ஆசிரியர்களிடம் “வெறும் விழுமியங்களை மட்டும் படித்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம்; எங்களுக்கு யதார்த்த வழிமுறைகளும் தெரிந்திருக்க வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்து, மாணவர்களுக்குள் Political Action Committee (PAC) என ஒன்றைத் துவங்கலாம் என முன்மொழிந்து, எனது நெருங்கியத் தோழர்கள் சிலரோடு சேர்ந்து அதைத் துவக்கினேன். தென் அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா நடத்திய அராஜகங்கள், அச்சுறுத்தல்களுக்கு எதிராக சாலை மறியல் உட்பட பல போராட்டங்கள் நடத்தினோம். வறுமைக்கு எதிராக, வறுமையில் வாடும் மக்களின் வேதனைகளை அமெரிக்க மக்கள் கண்முன் நிறுத்த மூன்று நாட்கள் தண்ணீர்கூட குடிக்காமல் PAC குழுவினர் உண்ணாவிரதம் இருந்தோம்.

பின்னர் ஹவாய் (Hawai’i) பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்தேன். எங்கள் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர் அலுவலகத்தில் (International Students Center) வைத்து CIA (Central Intelligence Agency) எனும் கொடிய அமெரிக்க உளவுத்துறைக்கு ஆள்சேர்க்கும் முயற்சி நடந்தபோது, நானும் பல சர்வதேச மாணவர்களும் அந்த நடவடிக்கைக்கு எதிராக அந்த அலுவலகத்தின் முன்பாகவே, எங்கள் அதிகாரி ஜூன் நாட்டன் போராட்டம் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதையும் புறக்கணித்து முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (தந்தை) எங்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்தபோது, எனது வகுப்புத் தோழி சாரா கிலியட்டும் நானும் “அதிபரை கண்ணால் பார்க்க மாட்டோம்” என்று அறிவித்து, அவரது நிகழ்வு நடந்த ஜெஃபர்சன் ஹாலுக்கு (Jefferson Hall) முன்னர் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்தோம். அடுத்த நாள் நாளிதழ்களிலெல்லாம் முன்பக்கத்தில் எங்கள் படமும் போராட்டச் செய்தியும் வெளியாயின.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும், காலனி ஆதிக்கத்தும் எதிராக ஆணித்தரமான நிலைப்பாட்டை எடுத்து, தமது இறையாண்மைக்காக ஹவாய் பூர்வக்குடி மக்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். அவர்களது போராட்டங்கள் பலவற்றில் நானும் பங்கேற்றேன்; ஒரு சாலையோரப் போராட்டத்தில் கலந்துகொண்டபோது, Honolulu Advertiser நாளிதழின் முன்பக்கத்தில் நான் பதாகையோடு நிற்கும் படத்தை பிரசுரித்து, வெளிநாட்டு மாணவர்கள்கூட உள்ளூர் மக்களை ஆதரிக்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டார்கள். போராடும் மக்களுக்கு ஆதரவாக முன்னணி நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதினேன். அதேபோல சில கோரிக்கைகளுக்காக ஹவாய் பல்கலைக்கழக ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்றுதிரண்டு போராடியபோது, அப்போதைய ஹவாய் மாநில ஆளுநர் திரு. பெஞ்சமின் கயட்டானோவுக்கு நான் எழுதிய திறந்த கடிதம் அங்குள்ள பத்திரிகைகளில் முழுவதுமாக வெளியிடப்பட்டது.

அமெரிக்க அரசுக்கும், அரசுத் துறைகளுக்கும் எதிராக பல பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளும், கடிதங்களும் எழுதியிருக்கிறேன். அமெரிக்கா ஈராக் நாட்டின் மீது படையெடுத்தபோது, எங்கள் பல்கலைக்கழக “அரசியல் அறிவியல்” துறையின் (Political Science Department) சிறப்புக் கூட்டம் ஒன்றைக் கூட்டி, பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகத் திரட்டி, நான் எழுதிய ஒரு கண்டனத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றச் செய்தேன். பிரான்சு நாடு பசிபிக் தீவுகளருகே அணுவாயுதப் பரிசோதனைகள் நடத்தியபோது, அதையும் அமெரிக்க அரசின் ஆதரவு நிலையையும் இயன்ற வழிகளிளெல்லாம் எதிர்த்தேன்.

நான் கற்பித்த வகுப்புக்களிலெல்லாம், பேசிய கருத்தரங்குகளிலெல்லாம், எழுதிய பத்திரிகைகளிலெல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, அமெரிக்க அரசுக்கு எதிராக, அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக, முதலாளித்துவத்துக்கு எதிராகத்தான் பேசியிருக்கிறேன், எழுதியிருக்கிறேன். என்னைப் பற்றி CIA, FBI (Federal Bureau of Investigation) போன்ற அமெரிக்க அரசின் உளவு நிறுவனங்கள் தகவல்கள் சேகரிப்பதாகக்கூட நண்பர்கள் என்னை எச்சரித்தனர். இதுதான் “அமெரிக்கக் கைக்கூலி”யான எனக்கும் “அமெரிக்கா”வுக்கும் உள்ள தொடர்பு.

சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
டிசம்பர் 3, 2013

சிலம்பம் வரலாறு

  



சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இக்கலை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது.


மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர்.
தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும். முற்காலத்தில் இக்கலையை வீர மறவர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது.
சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன. வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.

சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் தமிழக எகிப்திய கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது.

சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லபடுகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே, மலை நிலக் (குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில் உள்ளது.

சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய]] முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன. திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.


கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன.

சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர்.

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிலும், இலங்கை , மலேசியா, பிரான்சு, கனடா போன்ற நாடுகளிலும் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாக நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தென்பாண்டி தமிழரின் "சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது.

நரசிம்மர்- இரணியன் சண்டை - பழையறை "சோமநாத சாமி" கோயில்



"ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்றா" பாக்குறியா? என்ற இந்த உணர்ச்சிமிகு வசனத்தை கூற நம் சினிமா கதாநாயகன் எத்தனை முறை டேக் வாங்கி இருப்பார்?, அது போக அந்த காட்சியை படமாக எப்படியும் அதிநவீன ஒளிப்பதிவு சாதனங்கள், வெளிச்சம் போன்றவற்றை பயன்படுத்தி தானே அந்த காட்சியை படமாக்கி இருப்பார்கள். இவற்றை பெரிய அளவில் நாம் பேசுகிறோம், தவறில்லை அதுவும் உழைப்பு தான்.


பழையறை "சோமநாத சாமி" கோயிலில் இருக்கும் இந்த சிற்பம் "நரசிம்மர்- இரணியன் சண்டை" குறித்தது. கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா? அப்படியானால் இந்த தூணிலும் இருக்கிறாரா? என்று அகங்காரத்துடன் இரணியன் பேசிக்கொண்டிருக்கும் போதே தூணை கிழுத்துக்கொண்டு வெளியில் வந்த நரசிம்மர், அவனின் வயிற்றை தன் மடி மீது வைத்து ஆக்ரோஷமாக கிழிக்கிறார், அதற்கு முன் நடந்த சண்டை காட்சி தான் இது. 

நரசிம்மர் முகத்தை மட்டும் கொஞ்சம் உற்று நோக்குங்கள், அவர் கடும் கோபத்துடன் இருக்கிறார் என்பதை சிற்பி எவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார். சிங்க முகத்துடன் அவர் வாய் திறந்து கர்ஜிப்பதும், கண்கள் கோபத்தின் உச்சத்தில் இருப்பதும்..அடடா..அதுவும் கல்லில்!

நரசிம்மரிடம் இரணியன் சிக்கிகொண்டான் இனி அவன் தப்பிக்கவே முடியாது என்பதை காட்ட சிற்பி கையாண்டிருக்கும் யுத்தியை பாருங்கள்!."மாட்டினடா மவனே இனி நீ தப்பிக்கவே முடியாது" என்பதை போல் நரசிம்மர் தன் கால்களால் இரணியனின் கால்களை பிணைத்திருக்கும் இடத்தில் சிற்பி செய்திருக்கும் வித்தை என்னவென்று கூறுவது!.

இரணியன் தளர்ந்து விட்டான், என்பதை காட்ட அவனின் உடம்பு நரசிம்மரை நோக்கி முன்னோக்கி வந்துவிட்டது, கைகள் தளர்ந்த நிலையில் பின்னால் காட்டப்பட்டுள்ளது!

இடது கையால் இரணியனின் தலையை இழுத்துப் பிடுத்துக்கொண்டு, (அப்படி பிடித்திருக்கையிலேயே அவன் தலை அவரின் கைகளில் வந்து விடும் போலிருக்கின்றது) வலது கையை ஓங்கி வைத்திருக்கும் காட்சியை பார்த்தால் உங்களுக்கு என்ன வசனம் நினைவிற்கு வருகின்றது.

இந்த சிற்பம் செய்யப்பட்டு எப்படியும் ஆயிரம் வருடங்கள் இருக்கும், அந்த சிற்பி அன்றைக்கு கொடுத்த அதே உணர்சிகள் தான் இந்த 2013 ஆம் ஆண்டிலும் நாம் உணர்கிறோம். ஆயிரம் வருடங்களுக்கு முன், எந்த வித தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத கால கட்டத்தில் வெறும் சுத்தியலும் உளியையும் மட்டுமே வைத்துக்கொண்டு, இரண்டாவது டேக்'கிற்கு கூட செல்லாமல் இவ்வளவு உணர்சிகளை கல்லில் கொண்டு வர முடியுமென்றால்....

சினிமாவிற்கு தரும் முக்கியத்துவத்தை ஆயிரம் வருடங்களுக்கு முன் செய்யப்பட்ட சிற்பங்களுக்கும் கொஞ்சம் கொடுங்களேன்..ப்ளீஸ் 

குடவரைக் கோயில் - மகேந்திர வர்மர் - விசித்திர சித்தன்

                                                          Sasi Dharan - பயணங்களில் 
  •      இடைப்பட்ட எந்த நாட்களிலும் இல்லாத மழை, நாங்கள் புறப்படும் ஞாயிறுகளில் மட்டும் வந்து பயணத்தை கெடுக்காத வகையில் லேசாக பெய்து, செல்லும் இடங்களை பசுமையாக்கி, கண்களையும் மனதையும் குளுமையாக்கி, பயணத்தையும் புகைப்படங்களையும் அழகானதாக்கும் மழைத் தோழனுக்கு எங்கள் நன்றிகள். நண்பர் ரமேஷ், நண்பர் மாணிக் ராஜேந்திரன் மற்றும் தோழி ஒருவருடன் மழையும் இணைந்துகொள்ள காலையிலேயே கலைகட்டியது பயணம், தமிழகத்தின் முதல் (?) குடவரைக் கோயிலை காண்பது என்று முடிவு செய்து சென்னையிலிருந்து நேராக விழுப்புரம் நோக்கி பயணித்தோம். "ஓவர் டு ப்ளாக் அண்ட் ஒயிட்".
                   

    வருடம் 598, ஐப்பசி மாதம், அந்த இரவு நல்ல மழை பெய்துகொண்டிருந்தது, மகேந்திர பல்லவனுக்கு சரியான உறக்கமில்லை, அரண்மனைக்கு நேர் எதிரில் இருக்கும் அந்த கோயிலை பார்த்துகொண்டே முற்றத்தில் உலவிக்கொண்டிருந்தார். ஏதோ தவறு நடக்கப் போவதாக உள்ளுணர்வு கூறிக்கொண்டே இருந்தது, அதை தடுக்க முடியாது என்பதையும் அவர் அறிந்திருந்தார், யோசித்துக்கொண்டே இருக்கையில், கண் இமைக்கும் நேரத்தில் அந்த பயங்கர சம்பவம் நடந்து முடிந்தது, ஆம், செங்கற்களால் கட்டப்பட்டிருந்த அந்த நூறு வருடம் கடந்த பழமையான கோயில் அந்த பெருமழைக்கு தாங்காமல், அவர் கண் முன்னே இடிந்து மழையில் கரைந்துகொண்டிருந்தது. மிகுந்த மனவேதனை, அன்று இரவு முழுவதும் அவருக்கு தூக்கமில்லை, விடியற்காலை முதல் வேலையாக அரசவைக் கூட்டி மந்திரிகளோடும், சிற்பிகளோடும் ஆலோசிக்கிறார், நான் சமீபத்தில் தான் சைவ சமயத்திற்கு வந்திருக்கிறேன், இதுவரை யாரும் செய்யாத ஒன்றை என் சிவனுக்காக நான் செய்ய வேண்டும், நாம் அவருக்காக எடுக்கும் கோயில்கள் அனைத்தும் பல நூறு வருடங்களை கடக்க வேண்டும், புதிதாக ஏதேனும் நாம் முயற்சிக்க வேண்டும்! இதுவரை யாரும் இங்கு இவற்றை செய்த ஒன்றாக அவை இருக்கக்கூடாது, என்ன செய்யலாம்? கேள்வியை சபை முன்பு வைத்துவிட்டு அமைதியானார் மகேந்திரன்.      
    சபை தீவிரமாக யோசித்தது, வெகு நேரம் ஆகியும் பதில் இல்லை, சபையின் மௌனம் மகேந்திரருக்கு மேலும் வருத்தத்தை கூட்டியது, நீண்ட யோசனைக்கு பிறகு, சரி நானே ஒரு யோசனையைக் கூறுகிறேன், நம் நாட்டு சிற்பிகள் ஐம்பது பேரை, ஐந்து நபர் கொண்ட குழுவாக பத்து பிரிவுகளாக மலைகளை நோக்கி நாளையே பயணப்படட்டும், அவர்களின் முதன்மையான பணி, "கல்லை குடைந்து கோயிலை செய்யும் படி ஏதுவான பெரிய பாறைகளை தேர்ந்துப்பது தான்" இந்த உத்தரவு மந்திரிகளுக்கு அதிர்ச்சி அளித்தது, கல்லைக் குடைவதா? அது எப்படி சாத்தியம்? வட நாட்டில் இருப்பதை போன்று நம் பாறைகள் மெலிதானவை அல்லவே! இவை அனைத்தும் முரட்டுப் பாறைகள், இவற்றை குடைவது என்பது... " என்று மந்திரி ஒருவர் மேலும் பேச முற்பட.."போதும், இது என் உத்தரவு," என்று ஒரே வார்த்தையில் முடித்தார் மகேந்திரன், அடுத்த நாளே சிற்பிகளின் குழு மலைகளை நோக்கி பயணப்பட்டது, பல நாட்கள் பயணித்து, பல பாறைகளின் மீதேறி, பல குன்றுகளைக் கடந்து, ஒரு இடத்தை தேர்வு செய்து மன்னருக்கு செய்தி அனுப்பியது ஒரு குழு, மற்ற குழுக்களை திரும்ப வரச்சொல்லிவிடலாமா? என்று மந்திரி வினவ, இல்லை அவர்கள் தேடட்டும், சிவன் எல்லா இடங்களிலும் நிறைய வேண்டும்.
                       
    சிற்பிகள் தேர்ந்தெடுத்த அந்த குறிப்பிட்ட பாறையை காண மகேந்திர வர்மன் மிகுந்த ஆர்வத்துடன் அடுத்த நாளே புறப்பட்டு அந்த இடத்திற்கு வந்தார், சுற்றிலும் எழில் சார்ந்த மலை, எதிரில் நீர் தடாகம், இந்த காட்சிகள் அவர் மனதிற்கு இதமளித்தது, அஹா, அற்புதம்..என் அருமை சிற்பிகளே நீங்கள் இதுவரை செய்யாத ஒன்றை இங்கு முயற்சிக்கவிருக்கிறீர்கள், இந்த பணி பல மாதங்களுக்கு நீளும் என்பது எனக்கு தெரியும், இந்த பெரும் பாறைகளை குடையும் போது, துகள்கள் தெறித்து கண்கள் கூட குருடாகலாம், சிரமத்தை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு வேளை இந்த பணியை நாம் முடித்துவிட்டால், மழையாவது, புயலாவது, இந்த பூமியில் சந்திர சூரியன் உள்ளவரை நம் கோயில்கள் அழியாது என்று கண்ணில் பரவசம் போனகம் உற்சாகமாக பேசினார் மகேந்திரன் .

    ஒரு பக்கம் கலக்கமாக இருந்தாலும், மன்னரின் உத்தரவை மீறவா முடியும்? அடுத்த ஒரு சில நாட்களில், இது வரை யாரும் முயற்சிக்காத செயலை சிற்பிகள் அரங்கேற்றத் துவங்கினர், பாறைகளை சதுரம் சதுரமாக வெட்டி, கொஞ்சம் கொஞ்சமாக குடைந்து பல மாத போராட்டங்களுக்கு பிறகு, பெரும் சிரமங்களை கடந்து, தன் மன்னன் விரும்பிய அந்த கோயிலை பல்லவ சிற்பிகள் அவருக்காக முடித்துக்கொடுத்தனர். கோயிலில் மொத்தம் மூன்று கருவறைகள், ஒன்று பிரம்மாவிற்கு, மற்றொன்று விஷ்ணுவிற்கு, அடுத்து சிவனுக்கு, அது மட்டுமா? யாரும் செய்ய முடியாத ஒன்றை தன் மன்னன் முடித்து விட்டான் என்பதால் அவரை "விசித்திர சித்தன்" என்று பெருமையுடன் கற்களில் பொறித்தனர். 
    இந்த கதை என் கற்பனையில் உருவானது தான், ஆனால் முதன் முதலில் "செங்கல்,மண், உலோகம்,மரம்" இவை இல்லாமல் "பிரம்மா, விஷ்ணு, சிவனுக்காக ஒரு கோயிலை விசித்திர சித்தனாகிய நான் எழுப்பி இருக்கிறேன் என்று ஆசை ஆசையாக, பெருமையாக கூறும் "மகேந்திர வர்மரின்" கல்வெட்டுகளை இன்றும் நீங்கள் செஞ்சிக்கு அருகே இருக்கும் "மண்டகப்பட்டு" என்ற குடவரைக் கோயிலில் தொட்டுத் தடவிப் பார்க்கலாம். அது என்ன சாதாரண கல்வெட்டா?, அல்ல, 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதனின் மனக் கண்ணாடி, தமிழகத்தில் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் கட்டப்போகும் 40,000 மேற்பட்ட கற்கோயில்களுக்காக எழுப்பப்பட்ட அடித்தளம்.

    1400 வருடங்களுக்கு முன் புதிய ஒரு முயற்சியாக பாறையை கொண்டு குடைந்த அந்த குடவரைக் கோயிலை காணச் செல்லுங்கள். மதேந்திர பல்லவன், அவர் கோயிலை காண வருவோரை கண்ணுக்குத் தெரியாத காற்றாக இருந்து, இன்றும் நம்மை வரவேற்றுக்கொண்டிருக்கிறார்.        
    நன்றி - Sasi Dharan 





Saturday, November 16, 2013

தாலாட்டு - செந்தமிழே கண்ணுறங்கு!

ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ 
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ 
காராரும் வானத்தில் காணும் முழுநிலவே! 
நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே! 

ஆசை தவிர்க்க வந்த ஆணழகே சித்திரமே! 
ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே! 
உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே
என்மடியில் பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே! 

சின்ன மலர்வாய் சிரித்தபடி
பால்குடித்தாய் கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு! 
நீதிதெரியும் என்பார் நீள்கரத்தில்
வாளேந்திச் சாதியென்று போராடும் தக்கைகளின் நெஞ்சில் 

கனலேற்ற வந்த களிறே,
எனது மனமேறு கின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே! 
தேக்குமரம் கடைந்து செய்ததோரு தொட்டிலிலே 
ஈக்கள் நுழையாமல் இட்ட திரை நடுவில், 
பொன் முகத்தி லேயிழைத்த
புத்தம் புதுநீலச் சின்ன மணிக் கண்ணை இமைக்கதவால் மூடிவைப்பாய்; 

அள்ளும் வறுமை அகற்றாமல் அம்புவிக்குக் 
கொள்ளைநோய் போல் மதத்தைக் கூட்டியழும் வைதீகத்தைப் 
 போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல் வேரோடு பேர்க்கவந்த வீரா, இளவீரா! 
வாடப்பல புரிந்து வாழ்வை விழலாக்கும் மூடப்பழக்கத்தைத் தீ தென்றால் முட்டவரும் 

மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த 
ஈடற்ற தோளா, இளந்தோளா, கண்ணுறங்கு!
'எல்லாம் அவன் செயலே' என்று பிறர்பொருளை வெல்லம்போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும் 

காப்பார் கடவுள்உமைக் கட்டையில்நீர் போகுமட்டும் வேர்ப்பீர், உழைப்பீர் எனஉரைக்கும் வீணருக்கும், மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த தேனின் பெருக்கே, என் செந்தமிழே கண்ணுறங்கு!

நெஞ்சினில் ஏற்றிய நெருப்பினை அணையாது காத்திடல் வேண்டும்









இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறு

இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறு
***********************************
          
இசைப்பிரியா.. 1982 ஆம் ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகளாகப் பிறந்தாள். சோபனா என்று அவளுக்கு பெயர் சூட்டபட்டது. பேரழகும், வெள்ளை நிறமும், புன்சிரிப்பும் நிறைந்த மழலையை எண்ணி மனம்நிறைந்த கனவுகளோடு சீராட்டி தாலாட்டி பாலுட்டி வளர்த்தனர். மழலையால் தன் குறும்புகளால்அனைவரையும் கவர்ந்தவள் வளர்ந்து சிறுமியானாள்.

அக்கா மூவரோடும் தங்கையோடும் அயலாவரோடும் அழகுபதுமையாக அன்றாட கடமைகளான பாடசாலை செல்லுதல் பள்ளி தோழிகளோடு விளையாடுதல் என கவலையில்லாமல் பொழுதுகள் கழிந்தன. இக்காலகட்டத்தில் அனைவரின் இதயத்தையும் கவர்ந்திழுக்கும் இதயத்தில் கோளாறு என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது. இரக்ககுனத்தோடு அனைவரையும் அணுகும் இதயத்தில் ஓட்டை உண்டு என்றன மருத்துவ அறிக்கைகள். .மாறி மாறி பல சோதனைகள் இடம்பெற்றன. .மனவேதனையோடு இருந்த குடும்பத்தினருக்கு ஒருவழியாக மகிழ்ச்சியான செய்தி வந்தடைந்தது.

இதயத்தில் ஓட்டை இருந்தாலும் இவருக்கு எந்த சிக்கலும் இல்லையென்று மருத்துவர்கள் கூறினர். ஆறுதல் அடைந்த சோபனாவின் குடும்பத்தினர் இவரை தொடர்ந்து படிக்க வைத்தனர். சோபனா ஐந்தாம் ஆண்டுவரை மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் கல்வி கற்றாள்.

சிறுவயதில் இருந்தே அமைதியான பயந்த குணமுள்ளவர் சோபனா.தன வயதுக்கு மீறிய இரக்க குணமுள்ளவர், யாரவது துன்பபடுவதை பார்த்தால் மனமிரங்கி ஓடிச்சென்று அவர்களுக்கான உதவிகளை செய்துவிடுவார்.

ஆடல் பாடலில் அதிகம் ஆர்வம் கொண்டவள். அவற்றை முறையாக கற்றுகொள்ளும் முன்னரே ஏற்கனவே பயின்றவள் போல் திறம்பட செய்துகாட்டி பலரையும் ஆச்சரியப்பட வைத்தாள். புலமை பரீட்சை எழுதி சித்தியடைந்தவள் .யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் மேற்படிப்புக்காக சென்றால். அமைதியாக படிப்பை தொடர்ந்துகொண்டு இருக்கையில் 1995 ஆம் ஆண்டு முன்றாம் கட்ட ஈழப்போர் யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டிருந்த வேளை அது.

எதிரியானவன் பெருமெடுப்பிலான தாக்குதல்களின் ஊடாக யாழ் நகரை கைப்பற்றினான். தான் முன்னேறிச்செல்லும் பாதையெங்கும் காண்பவரையெல்லாம் அடித்தும், துன்புறுத்தியும் படுகொலை செய்தான். உயிரை காக்க ஊரையும் உடமையையும் விட்டுவிட்டு கையில் கிடைத்தவற்றோடு நடந்தும், ஓடியும், விழுந்தும், எழும்பியும் வன்னியை நோக்கி ஓடினர் மக்கள். அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று.ஒருவழியாக உயிரை கையில் பிடித்துகொண்டு சோபனாவின் குடும்பத்தினர் வன்னிக்கு சென்றனர்.வன்னி மண்ணும் வரவேற்பில் பேர்பெற்ற மக்களும் இவர்களை அன்புக்கரம் நீட்டி வரவேற்றனர். சோபனா தனது மேற்படிப்பை வன்னியில் தொடர்ந்தாள்.

வன்னி மண்ணுக்குள் சென்ற நாளிலிருந்து தமிழீழ விடுதலை போர் பற்றிய தேவையினையும் தன கடமையினையும் நன்கு உணர்ந்து கொண்டாள். தமிழீழ விடுதலை புலிகளின் பரப்புரை குழுவினரால் நடத்தப்படும் வகுப்புக்களில் அதிக ஈர்ப்பு கொண்டாள்.

ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தமானால்தான் ஓயாது ஒலித்துகொண்டிருக்கும் வெடியோசை ஓய்ந்து ஒளிமயமான எதிர்காலம் தமிழனுக்கு விடியும் என்று உணர்ந்தாள். 1999 ஆம் ஆண்டு பாடசாலைக்கு பரப்புரை செய்யவந்தவர்களோடு கடமையும் கண்ணியமும் நிறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளோடு தன்னை இணைத்து கொண்டாள்.சோபனா.

இயக்கத்தில் இணைந்துகொண்டால் இயக்க பெயர் ஒன்று சூட்ட வேண்டுமல்லவா.. சோபனா என்ற பெயர் இவரது தோற்றத்தோடு எவ்வளவு ஒத்துபோகின்றதோ அதைவிட அதிகளவில் பொருந்தக்கூடிய ஒரு பெயர் இவருக்கு இடப்படுகின்றது. இயல் இசை நாடகத்துறையில்தான் இவரது விடுதலை பயணம் இருக்கபோகின்றது என்பது தெரிந்தோ என்னவோ “இசையருவி” என பெயர்சூட்ட பட்டது இசையருவியாய் விடுதலை போராளியாய் தொடக்க பயிற்ச்சிகளை முடித்தாள்.

சோபனா, தமிழின விடுதலைக்காக தன முழு நேரத்தையும் ஒதுக்கினாள். இசையருவியின் உடல்நிலை காரணமாகவும் இவரது கவர்ந்திழுக்கும் அழகான தோற்றமும் இவளை ஊடகத்துறை போராளியாக தெரிவுசெய்ய வைத்தது. இசையருவி என்ற அழகான தமிழ் பெயரோடு தன் பணியை தொடங்கியவளை .இசையின் மேல் இவளுக்கு இருந்த விருப்பம் காரணமோ என்னமோ தோழிகள் இவளை இசைப்பிரியா என்று அழைக்க தொடங்கினர்.

இப்படி தன் வாழ்கையை கடந்து வந்த இசைப்ரியாவிற்க்கு சிங்களவனால் நடந்த கொடுமை சொல்லில் அடங்காத துயரம் . ஓர் பெண்ணிற்கு நடந்த வன்கொடுமைகளை உலகத்திற்கு சொல்ல மனமும் வரவில்லை , சொல்லாமலும் இருக்க முடியவில்லை .
இனி உலகில் எந்த ஓர் தமிழ் பெண்ணுக்கும் இந்நிலை ஏற்படாமல் காப்பது ஒவ்வொரு தமிழ் ஆண்களின் கடமை ..

நெடுமாறன்

யார் அந்த நெடுமாறன்?
------------------------------------------------
                                            
மதுரையில் 72-ம் ஆண்டு தி.மு.க. மாநாடு நடைபெற்றது. அதற்காக உள்ளூர் வியாபாரிகளிடம் தி.மு.க-வினர் வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுபற்றி அப்போது மதுரைக்கு வந்த ஆளுநர் கே.கே.ஷாவிடம் நெடுமாறன் புகார் மனு அளித்தார். தி.மு.க. ஆட்சிக்கு எதிரான முதல் புகார் மனு அதுதான். பத்திரிகைகளில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மாநாட்டில் பேசிய முரசொலி மாறன், 'யார் அந்த நெடுமாறன்? அட்ரஸ்கூட இல்லாதவர்கள் கவர்னரிடம் புகார் கொடுக்கிறார்கள்’ என்று கடுமையாக தாக்கிப் பேசினார். இதுவும் பத்திரிகைகளில் வெளியானது.

இதற்கு அடுத்த சில நாட்களில், மேலூரில் ஒரு கட்சிக் கூட்டத்தில் காமராஜர் கலந்துகொண்டார். 'நெடுமாறனின் அட்ரஸை சிலர் கேட்கிறார்கள். சொல்கிறேன் குறித்துக்கொள்ளுங்கள். பழ.நெடுமாறன், எம்.ஏ. பட்டதாரி. குறிஞ்சி பத்திரிகை ஆசிரியர். மதுரையில் பிரபலமான குடும்பம் ஒன்றில் பிறந்தவர், நாளை காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், அதில் அமைச்சராகும் வாய்ப்பு உள்ளவர்’ என்று காமராஜர் சொன்னபோது, மேடையில் இருந்த அத்தனை பேரும் அதிர்ந்துவிட்டார்கள்.
ஏனெனில், காமராஜர் யாரிடமும், 'நீதான் அமைச்சர்’ என்று எதுவும் சொல்ல மாட்டார். அவரே அப்படிச் சொல்லும் அளவுக்கு அரசியல் வாழ்க்கை நடத்தியவர் அய்யா பழ நெடுமாறன் .

திமுக இந்திரகாந்தி மீது தாக்குதல் நடத்திய போது தான் கல்லடிகளை தாங்கி கொண்டு இந்திராவின் உயிரை காத்தவர் . அவர் நினைத்திருந்தால் இதை சொல்லியே காலம் முழுவதும் மத்திய அமைச்சராக இருந்திருக்கலாம் . அனால் தமிழ் இனபற்றின் காரணமாக இன்றுவரை போராளியாக வாழ்கிறார்

தலைவர்கள் மட்டுமில்லை, மக்களும்....


அது ஒரு கனாக் காலம் ... தலைவர்கள் .மட்டுமில்லை .. 


                                  

மக்களும் நேர்மையின் சிகரங்களாக வாழ்ந்தக் காலம் அது .... காமராஜர் ஒரு நாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் . 

அப்பொழுது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே .வந்தனர் பரட்டை தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் ஏழ்மையை பறைசாற்றின . பணியாளர் ஒருவர் அவர்களை விரட்ட , முற்பட , கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள் . தம்மை பார்க்க வரும் பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய காமராஜர் , அந்தக் குழந்தைகளை கவனித்து விடுகிறார் . அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க " என்ன யாரை பார்க்க வந்தீங்க ?"" என்று கேட்டப் படி அவரே குழந்தைகளிடம் வந்து விட ... 

அப்பொழுது அந்தச் சிறுமி தயங்கி பேசினாள் " உங்களைத் தான் பார்க்க வந்தோம் . எங்களுக்கு அப்பா இல்லை . அம்மா மட்டும் தான் . அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரீட்சை பீஸ் கட்ட பணம் இல்லை . உங்களை பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அது தான் வந்தோம்" என்றாள் ... 

அவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தப் படி , " அம்மா தான் அனுப்பிச்சாங்ளா ? என்று காமராஜர் கேட்க ... அந்த குழந்தைகளோ " இல்லை அய்யா , நாங்களாகத் தான் வந்தோம் . அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக விக்கறாங்க அதுல தான் எங்களை படிக்க வைக்கிறாங்க """ என்று சொல்ல . அதற்கு மேல் கேட்க முடியாமல் . மாடிக்கு சென்ற அவர் ஒரு கவருடன் .வந்தார் சிறுமியிடம் கொடுத்து " இதில் கொஞ்சம் பணம் இருக்கு . அண்ணனுக்கு பீஸ் . கட்டிடுங்க அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும் என்று சொல்லி அனுப்பி வைத்தார் ...." 

மறுநாள் மீண்டும் அந்தக் குழந்தைகள் வந்தனர் . உதவியாளர் வைரவன் குழந்தைகளை உள்ளே அழைத்து வந்தார் .... " வாங்க வாங்க " என்று அவர்களை வாஞ்சையுடன் அழைத்த காமராஜரிடம் அந்தக் குழந்தைகள் . " பரீட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா . அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க என்று காமராஜரிடம் அந்தச் சிறுமி ரசீதை நீட்டினாள் .... காமராஜர் கண் கலங்கி விட்டார் . 

ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா ? குழந்தைகள் அவரை ...வணங்கினார்கள் அவரும் குழந்தைகளை வணங்கினார் .... 

வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்

( நன்றி மாலை மலர் சிறப்பு இணைப்பிற்கு ) .

Wednesday, October 30, 2013

அகத்தியர் வாழும் பொதிகை மலை

                         \
அகத்தியர் வாழும் பொதிகை மலையில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,150 அடி உயரத்திலுள்ள அகத்தியரைத் தரிசிக்கச் செல்வதை புனிதப் பயணம் என்றும் கூறலாம்.

இப்பொதிகை மலை இயற்கை : அபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும் அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், புல்வெளிகள் மரங்கள் நிறைந்த காடுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. அனைத்து வனவாழ் உயிரினங்களும் உள்ளன.

அகத்தியர் தமிழ் முனிவர்: அகத்தியர் தமிழ் முனிவரைத் தரிசிக்க திருவனந்தபுரம் (கேரளம்) பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் (Guide) மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது.

தமிழ் முனிவரைத் தரிசிக்க ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் சிவராத்திரி வரை கேரளத்தவர்கள் தினமும் குழுவாக (நாள் ஒன்று சுமார் 200 பேர்) சென்று வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாதம் முதல் சென்று வருகின்றனர்.

ஓம் அகத்தீசாய நம.

நவ பாஷாணம்


                       
நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு வகையும் உண்டு.நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல்,இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..,

1.சாதிலிங்கம்.
2.மனோசிலை
3.காந்தம்
4.காரம்
5.கந்தகம்
6.பூரம்
7.வெள்ளை பாஷாணம்
8.கௌரி பாஷாணம்
9.தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும்.நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில்,கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,குழந்தை வேலப்பர் கோயில்.மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது,இதில் இரண்டு போகர் உருவாக்கியவை.தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களா ல் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்துவிடும்.

Friday, October 4, 2013

சாமந்த நாராயண விண்ணகரம்




தஞ்சையில் உள்ள ஒவ்வொரு கோயிலுக்கு பின்னாலும் வரலாறு புதைந்து கிடக்கின்றது. பார்பதற்கு சாதாரணமாய் தோன்றும் இந்த கோயிலுக்கு பின்னும் அப்படி ஒரு வரலாறு உள்ளது. 

கி.பி 9 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் "விஜயலாயச் சோழன்" என்கிற மன்னனால் புத்துயிர் பெற்று தஞ்சையை மீட்ட சோழர்கள், பின் மெல்ல மெல்ல வளர்ந்து ராஜ ராஜன், ராஜேந்திரன் போன்ற அரசர்களின் காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்து கடல் கடந்து கப்பல் படை உதவியுடன் கடாரம் வரை சென்று கொடி நாட்டினார்கள்.

'எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது' என்ற கீதை வரிகளுக்கேற்ப மூன்றாம் ராஜ ராஜன் காலத்தில் சுந்தர பாண்டியன் படை எடுப்பினால் தஞ்சை செந்தழலுக்கு இரையாக்கப்பட்டது. சோழ நகரங்கள் ஒவ்வொன்றும் மண்மேடாக்கப்பட்டது, அங்கு இருந்த மாடமாளிகைகள் ஒவ்வொன்றும் இடித்து நொறுக்கப்பட்பட்டது.அவற்றிலுள்ள தூண்கள் எல்லாம் உடைத்துப் பொடியாக்கப்பட்பட்டது.சோழ தேசத்தையே தரைமட்டமாக்கிய பின், கழுதையைப் பூட்டி ஏர் உழுது, கவடி விதைத்துள்ளான் சுந்தர பாண்டியன்.

காவிரி பாய்ந்து வயல்களெல்லாம் பச்சை பசேலென இருந்த தஞ்சை இனி எதற்கும் பயன்படாது என்ற நிலைக்கு வந்தது. பல வருடங்களாக பாழ்பட்டுக் கிடந்த தஞ்சைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினான் பாண்டிய மன்னன் வல்லபன் (1308-1344) என்ற மன்னனுக்கு சேனாதிபதியாய் இருந்த "சாமந்தன்" என்பவன்.

பாழ்பட்டுக்கிடந்த தஞ்சை நகரை திருத்தி அங்கு "சாமந்த நாராயண விண்ணகரம்" என்ற பெருமாள் கோயிலை நிறுவி , அந்த கோயிலுக்கு "சாமந்த நாராயண குளம்" என்ற குளம் ஒன்றை வெட்டி, அங்கு ஒரு புதுக் குடியிருப்பையும் தோற்றுவிக்கிறான் "சாமந்தன்". அப்படி அவன் தோற்றுவித்த குடியுருப்பு மெல்ல மெல்ல வளர்ந்து நாயக்கர்கள், மராட்டிய மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என பயணித்து இன்று தஞ்சை மாநகராய் வளர்ந்துள்ளது.

அழிந்த தஞ்சையில் புதுக் குடியிருப்பு வரக் காரணாமாய் இருந்த கோயில் "கீழ வாசல்" பகுதியில் "கீழை நரசிம்மர்" என்ற பெயரில் இன்றும் உள்ளது. கோயிலின் எதிரில் பெரிய குளமும் உள்ளது. தஞ்சை செல்லும் போது பெரிய கோயிலை மட்டும் பார்த்து விட்டு திரும்பாமல் வரலாற்றை தேடி பயணியுங்கள். ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

சோழ தேசத்தில் பயணிப்போம்...

கருப்பட்டி

  

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்
தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில்
சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.

Tuesday, September 24, 2013

ஹிந்திய பயங்கரவாதிகளினால் திலீபன் அண்ணாவை இழந்து விடுவோமா என்ற அச்சத்தில் 9ம் நாள்....


ஹிந்திய பயங்கரவாதிகளினால் திலீபன் அண்ணாவை இழந்து விடுவோமா என்ற அச்சத்தில் 9ம் நாள்..

   
1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 23ம் திகதி இது திலீபனுடன் 9ம் நாள். அதிகாலை 5 மணியிருக்கும் கிழக்குப்பக்கத்திலே தேர் முட்டி வாசலில் நின்றிருந்த வேப்பமரத்திலிருந்து குயில் ஒன்று கூவிக்கொண்டிருந்தது. அதன் குரலிர் ஒலித்த விரக்தியின் சாயலை கேட்ட நான் திலீபனை ஏக்கத்துடன் பார்த்தேன். அந்தக்குயில் எதை இழந்து இப்படிக்கூவுகிறதோ தெரியவில்லை ஆனால் இந்தக்குயில் எம்மை எம் இனத்தைக்காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே இந்தக்குயிலின் சோக கீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை. திலீபனை நன்றாக உற்றுப்பார்க்கிறேன்.
அவரின் உடலிலுள்ள சகல உறுப்புக்களும் இன்று செயலற்றுக்கொண்டிருக்கின்றன உதடுகள் அசைகின்றன ஆனால் சத்தம் வெளிவரவில்லை. உதடுகள் பாளம்பாளமாக வெடித்து வெளிருற்று இருந்தன. கண்கள் இருந்த இடங்களில் இரு பெரிய குழிகள் தெரிகின்றன. இன்று காலை 8.30 மணியிலிருந்து யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 17 பாடசாலைகளிலிருந்து சுமார் 5000 மாணவ மாணவிகள் அணிவகுத்து வந்து திலீபனைப் பார்த்து கண்கலங்கியவாறு மைதானத்தை நிறைத்துக் கொண்டிருந்தனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் ஊழியர்களும் ஏராளமாக வந்து பார்த்தனர். காலை 9 மணியளவில் யாழ் கோட்டை இந்திய இராணுவ முகாம் முன்பாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பிரதான வாசலில் அமர்ந்த இந்திய படையினர்வெளியே வராதவாறு மறியல் செய்யத்தொடங்கினர். பொதவாக திலீபனின் உடல் நிலை மோசமடைந்த வந்த அதே வேளை பொதுமக்களின் குமுறல்களும் அதிகரித்ததை புரிந்து கொள்ள முடிந்தது.
திலீபன் தங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இன்று காலை இந்தியப்படையின் தென்பிராந்தியத்தளபதி லெப்.ஜெனரல். திபேந்திர சிங் அவர்கள் கெலிகொப்டர் மூலம் யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வந்து இறங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தார். பின்னர் இருவரும் தனித்தனியான வாகனங்களில் புறப்பட்டு யாழ் கோட்டை இராணுவ முகாமுக்குள் சென்றனர்.
1 மணி நேரத்திற்கு மேலாக இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான். கோட்டை வாசலில் மறியல் செய்த ஆயிரக்கணக்காண மக்களின் எழுச்சியை கண்ட பின்னர்தான் தளபதி அவர்கள தலைவர் பிரபாகரனை காண பறந்து வந்திருக்கவேண்டும். திலிபனின் 5 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல தொண்டர் ஸ்தாபனங்கள் பிரதமர் ராஜுவ்காந்திக்கு மகஜர்களை இன்று அனுப்பி வைத்திருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
இன்று மாலை என் காதில் ஓர் இனிய செய்தி வந்து விழுந்தது. இந்திய தூதுவர் டிக்சிற் தலைவர் பிரபாகரனை சந்திப்பதற்கு வந்திருக்கிறார் என்பதுதான் அது. ஆம் பிற்பகல் 1.30 மணியிலிருந்த பிற்பகல் 6.30 மணி வரை இரு குழுக்களும் அமைதியாக பேச்சு வார்த்தையை நடாத்தின. இந்தியத்தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் தூதவர் டிக்சிற், இந்திப்படையின் தென்பிராந்தியத்தளபதி லெப். ஜெனரல் திபேந்திர சிங், அமைதி காக்கும் படைத்தளபதி மேஜர் ஜெனரல் கர்க்கிற்சிங், பிரிகேடியர் பெர்ணான்டஸ், இந்திய தூதரக பாதுகாப்பு அதிகாரி கப்டன் குப்தா.
விடுதலைப்புலிகளின் தரப்பில் தலைவர் பிரபாகரனுடன், திரு.அன்ரன் பாலசிங்கம், வழக்கறிஞர் திரு. கோடீஸ்வரன், திரு. சிவானந்த சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக செய்தி வந்ததுமே என்னையறியாமலே என் மனம் துள்ளிக்குதித்தது. 9ம் நாளான இன்று எப்படியும் நல்ல முடிவு ஏற்படும் அந்த நல்ல முடிவு ஏற்பட்டதும் உடனடியாக யாழ் பெரியாஸ்பத்திரியில் அனுமதித்து அவசர சிகிச்சை பிரிவில் விசேட சிகிச்சை அளிக்கவேண்டும் எமக்காக இத்தனை நாட்களாக துன்பப்பட்டு அணுஅணுவாக தன்னை வருத்திக்கொண்டிருக்கும் அந்த நல்ல இதயம் நிச்சயமாக பூத்துக்குலுங்கத்தான் போகிறது என்ற கற்பனைக்கடலில் இரவு 7.30 மணி வரை நானும் எனது நண்பர்களும் மிதந்து கொண்டிருந்தோம்.
இரவு 7.30 மணிக்கு அந்த செய்தி என் காதில் வந்து விழுந்த போது இந்த உலகமே தலை கீழாக சுற்றத்தொடங்கியது. அந்தக்கற்பனைக் கோட்டை ஒரே நொடியில் தகர்ந்து தவிடுபொடியாகியது. ஆம் பேச்சுவார்த்தையின் போது இந்தியத்தூதுவரால் வெறும் உறுதிமொழிகளை மட்டுந்தான் தர முடிந்தது. திலீபனின் உண்ணாவிரத போராட்டம் ஓர் தொடர்கதையாகவே ஆகிவிட்டது.எழுத்தில் எந்தவித உறுதி மொழிகளும் இந்தியத்தரப்பு தர விரும்பவில்லை என்பதை அவர்கள் நடத்தை உறுதிசெய்தது. திலீபனின் மரணம் பயணம் இறுதியானது என்பதையு11ம் அது உணர்த்தியது

கவிஞர் மு.வா.யோ

தமிழ்நாடு விடுதலையை முன்வைத்தபோதுதான் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார் _ வீரப்பன்


ஹிந்திய ரா பயங்கரவாதிகளின் விடுதலைப் போராட்டங்களை அடக்கும் பயங்கரவாதம்... 

• வீரப்பன்

யானைத்தந்தம் கடத்தியபோது கொல்லப்படவில்லை.சந்தணக்கட்டை கடத்தியபோது கொல்லப்படவில்லை.
தமிழ்நாடு விடுதலையை முன்வைத்த பின்பே நயவஞ்சகமாக கொல்லப்பட்டார்.

                                     

இந்திய உளவுப்படையானது இந்தியாவுக்குள் மட்டுமல்ல இந்தியாவுக்கு வெளியிலும் கொலைகள் செய்கிறது என்பதற்கு தோழர் நெப்போலியன் கொலையை கடந்த பதிவுகளில் சுட்டிக்காட்டியிருந்தேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும் எனவே உளவுப்படைகளும் சட்டப்படியே செயற்படும் என்றும் பலர் அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அது அமெரிக்க சி.ஜ.ஏ மற்றும் ரஸ்சிய கே.ஜி.பி இஸ்ரவேலின் மொசாட் போன்று மிகவும் மோசமான பயங்கரமான உளவுப்படையாகும்.

இந்த உளவுப்படைகளுக்கு ஒதுக்கப்படும் பணம் எவ்வளவு? அவர்களின் செயற்பாடு என்ன? போன்றன குறித்து பாராளுமன்றத்தில் கூட கேட்க முடியாது. அந்தளவிற்கு அவர்களின் அனைத்து செயற்பாடுகளும் இரகசியமாக வைக்கப்படுகிறது. அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களும் நீதி, நியாயம், சட்டம் எது குறித்தும் அக்கறையின்றி மிகக்கொடிய கிரிமினல்களாக வலம் வருகின்றனர்.

வங்கதேச விடுதலையின் போது முக்திபாணி என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு பயிற்சி ஆயுத உதவிகளை இந்திய அரசு செய்தது. பின்னர் வங்கதேசம் விடுதலையடைந்ததும் இந்திய அரசு செய்த முதல் வேலை தான் பயிற்சி கொடுத்த அத்தனை போராளிகளையும் இரகசியமாக கொன்றதுதான். இதனையே புளட் அமைப்பினர் “வங்க தந்த பாடம்” என்று பிரசுரம் அடித்து வெளியிட்டனர். ஆனால் பின்னர் இது இந்திய அரசுக்கு தெரிந்து விட்டது என்றதும் அத்தனை பிரதிகளும் தீயிட்டு அழித்தார்கள். இந்த “வங்க தந்த பாடம்” பிரசுர வெளியீட்டுக்கு உழைத்த சந்தியார் பின்னர் இந்திய உளவுப்படையின் ஆசியுடன் புளட் தலைமைப்பீடத்தினால் சென்னையில் வைத்துக் கொல்லப்பட்டார்.

புலவர் கலியபெருமாள் தன் இறுதிக்காலங்களில் தனது தலைவராக சந்தன வீரப்பன் அவர்களைக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டு சேகுவாரா என்று அழைக்கபட்ட கலியபெருமாள் வீரப்பனை தன் தலைவர் என்று குறிப்பிட்டமைக்கு காரணம் வீரப்பன் தமிழ்நாடு விடுதலையை முன் வைத்தமையே.

அதேபோல் வீரப்பன் யானைத் தந்தம் கடத்தியபோது கொல்லப்படவில்லை. சந்தணக் கட்டைகளை கடத்தியபோது கொல்லப்படவில்லை. மாறாக தமிழ்நாடு விடுதலையை முன்வைத்தபோதுதான் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார்.

இதிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியது என்னவெனில் தமிழ் மக்களின் விடுதலைக்காக யார் முயற்சி செய்தாலும் அவர்களை இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் கொன்று அழிப்பதற்கு தயங்காது என்பதே.

இந்திய அரசு ஈழப் போராளிகளுக்கு நிறைய உதவி செய்ததாகவும் ராஜீவ் கொலைக்கு பின்னரே அது உதவிகளை நிறுத்தியதாகவும் இன்றும் கூட சில இந்திய விசுவாசிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அது தவறு. ஆரம்பம் முதலே இந்திய அரசும் அதன் உளவுப் படைகளும் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நசுக்கியே வந்திருக்கின்றது. அதுதான் உண்மை வரலாறு ஆகும்.

-பாலன் தோழர்
 

Like ME

Sample Text

Sample Text